செய்திகள்

ஜூலை 9ல் தாக்கலாகிறது ரயில்வே பட்ஜெட்

புதுடில்லி : புதிதாக பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, அடுத்து வரும் பார்லி. கூட்டத்தொடரில் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. ஜூலை 7ம் தேதி துவங்கி ஜூலை 25ம் தேதி வரை பட்ஜெட் கூட்டம் நடக்கும் என்றும், ஜூலை 9ம் தேதி ரயில்வே பட்ஜெட்டும் (indian railway budget), ஜூலை 11ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பபடலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

indian railway

நல்லதொரு பட்ஜெட்டாக இருக்கும் : பணவீக்கம் தொடர்பான பல்வேறு சவால்களை மோடி சந்தித்து வரும் நிலையில், புதிய அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. தனியார் டிவி ஒன்றிற்கு மத்திய இணையமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பிரத்யேக பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது : மத்தியில் பொறுப்பேற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முன் பல்வேறு சவால்கள் வைக்கப்பட்டுள்ளன; பணவீக்கம்; விலைவாசி உயர்வு உள்ளிட்டவைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டியவைகளாக உள்ளன; இவை தொற்று நோய் போன்று நாட்டை பாழ்படுத்தி வருகின்றன; நாங்கள் எங்கள் தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதத்தில் இந்த பட்ஜெட் அமையும்; இது வெறும் கவர்ச்சிகரமான பட்ஜெட்டாக இல்லாமல் சிறப்பானதொரு பட்ஜெட்டாக அமையும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வரிச்சலுகைகள்

வரிச்சலுகைகள் இருக்குமா? : தேசிய ஜனநாயக அரசு, ரயில் கட்டணத்தை உயர்த்த உள்ளதாகவும், வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் எனவும் கூறப்படுகிறது. மத்திய நிதித்துறை அமைச்சக தகவல்களும் இதையே தெரிவிக்கின்றன. வணிக கட்டிடங்களுக்கு வரிவிலக்கு அளிப்பது தொடர்பான பரிந்துரையும் ஜூன் 20ம் தேதி நிதித்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வீட்டுக் கடன்

வீட்டுக் கடன் மற்றும் ஆயுள் காப்பீட்டு பிரிமியங்களுக்கான வரிவிலக்கு உச்சவரம்பை உயர்த்துவது தொடர்பாகவும் மத்திய அரசு பரிந்துரைத்து வருவதாக கூறப்படுகிறது. ஆயுள் காப்பீட்டு பிரிமியங்கள் ரூ.5000 ஆக உயர்த்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் எதிர்ப்பு

ரயில்வே பட்ஜெட்டை பொறுத்தவரையில், பயணிகள் கட்டணம் தவிர்க்க முடியாதது எனவும், பிரதமரிடம் கலந்து ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா கூறி இருந்தார். இந்நிலையில், ரயில் கட்டணங்களை உயர்த்த வேண்டும் என மத்திய அரசிற்கு ரயில்வே நிர்வாகம் பரிந்துரைத்துள்ளதாகவும், இதற்கு பிரதமர் மோடி எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம், தவிர்க்க முடியாதாக இருந்தால் மட்டுமே பயணிகள் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என மோடி கூறி உள்ளதாக பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்லீப்பர் வகுப்பு கட்டணத்தை உயர்த்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என கூறி உள்ள பிரதமர், முதல் வகுப்பு ஏசி மற்றம் 2ம் வகுப்பு ஏசி கட்டணங்களை உயர்த்த சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ரயில் கட்டண உயர்வு தவிர்க்க முடியாததாக இருக்கும் பட்சத்தில் 5 சதவீதம் வரை கட்டண உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது. மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பல்வேறு வகையான தகவல்களும் கருத்துக்களும் கூறப்பட்டு வந்தாலும், நாட்டில் நிலவும் பணவீக்கம், பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி ஆகியவற்றை சீர்செய்யும் வகையில் பல விஷயங்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the author

admin

Leave a Comment