Plastic Bags Ban: பட்டுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் 600 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறி முதல் செய்யப்பட்டது. இவற்றை வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு சுற்றுச் சூழல் பாதுகாப்பு சட்டம் 1986ன்படி இயற்றப்பட்ட பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை மற்றும் கையாளுதல் விதிகள் 2011 ன்படி பட்டுக்கோட்டை நகராட்சி பகுதிக்குள் பிளாஸ்டிக் தயாரிப்பு, விற்பனை மற்றும் பயன்படுத்துவோர் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபரப்படி, 1920ம் வருடத்திய தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்ட விதிகளின்படியும் நகர்மன்ற தீர்மானத்தின்படியும் பட்டுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பொருட்கள் இங்கு தடையை மீறி பயன்படுத்தப்படுவது ஆய்வில் தெரிய வந்தது. இதையடுத்து நகராட்சி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) ரெங்கராசு உத்தரவின்பேரில் நகராட்சி துப்புரவு அலுவலர் மூர்த்தி தலைமையில் துப்புரவு ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், அறிவழகன், ஆரோக்கியசாமி மற்றும் பொது சுகாதார பணியாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டனர். இதில் 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட இவற்றின் எடை 600 கிலோ.
இது குறித்து நகராட்சி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) ரெங்கராசு கூறுகையில், இனிவரும் காலங்களில் 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பயன்படுத்துவது மற்றும் விற்பனை செய்வது தெரியவந்தால் பறிமுதல் செய்வதுடன் அபராதம் விதிக்கப்பட்டு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் பொதுமக்கள் பிளாஸ்டிக் கேரி பேக்குகளில் உணவு மற்றும் இதர பொருட்கள் வாங்குவதை தவிர்த்து பட்டுக்கோட்டை நகரத்தை து£ய்மையாக பராமரிக்கவும், சுற்றுச்சூழல் மாசுபடுதை தவிர்க்கவும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.