காரைக்குடி – திருவாரூர் அகல ரயில் பாதை
பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடி – திருவாரூர் அகல ரயில் பாதை பணி துவக்கப்பட்டு, நான்கரை ஆண்டுகள் ஆகியும், இன்னும் முடியாமல், ஜவ்வாய் இழுத்துக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டிலாவது முடிவுக்கு வருமா என, பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
காரைக்குடி -பட்டுக்கோட்டை – திருத்துறைப்பூண்டி- திருவாரூர் இடையே மீட்டர்கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி நடந்து வருகிறது. இத்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.1,200 கோடியில் இதுவரை ரூ.700 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியான காரைக்குடி – பட்டுக்கோட்டை இடையே 73 கிலோமீட்டர் தூரத்துக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணியை இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு இருந்தது. இதுவரை 90 சதவீத பணிகள் முடிந்துள்ளன. புதுக்கோட்டை மாவட்டம், வாளரமாணிக்கம் -அறந்தாங்கி இடையே உள்ள 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பணிகள் மட்டும் நிலுவையில் உள்ளன.
ஏன் இன்னும் முடிக்கவில்லை?
மணல் குவாரி பிரச்சினையால் ரயில் பாதை அமைப்பதற்கு தேவையான மண், கிராவல் மண் கிடைக்காமல் காரைக்குடி – பட்டுக்கோட்டை இடையேயான அகல ரயில் பாதை பணி 6 மாதங்களாக முடங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, பேராவூரணி மக்கள் கூறியதாவது: திருவாரூர் – காரைக்குடி இடையே, மீட்டர் கேஜ் பாதை இருந்த போது, சென்னையில் இருந்து காரைக்குடிக்கு கம்பன் எக்ஸ்பிரஸ். சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சேது எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டன. திருவாரூர் – பட்டுக்கோட்டை; காரைக்குடி – பட்டுக்கோட்டை இடையே, பயணிகள் ரயில்களும் இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து, தென் மாவட்டங்களுக்கு, இந்தப் பாதையில், சரக்கு ரயில்களும் இயக்கப்பட்டன. மீன், கருவாடு, உப்பு, தேங்காய் போன்றவை சென்னைக்கும் அனுப்பப்பட்டன.
ரயில் பயணிகளின் எதிர்பார்ப்பு
தற்போது அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை மக்கள் சென்னைக்கு செல்ல வேண்டுமானால் பேருந்தில் மட்டுமே செல்ல முடிகிறது விழா காலங்களில் பேருந்து கடடனங்கள் மிக அதிக அளவில் உயர்த்த படுவதால் பயணிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாக்கப்படுகிறார்கள் ஆகவே காரைக்குடி – திருவாரூர் அகல ரயில் பாதை பணியை விரைந்து முடிக்கக் கோரி கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இந்நிலையில் பட்டுக்கோட்டை சுற்றுவட்டார மக்களின் நீண்ட நாள் கனவான அகல ரயில் பாதை திட்டம் இன்னும் சில மாதங்களில் நனவாக உள்ளது. அதற்கு உண்டான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. பட்டுக்கோட்டை முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் ஏராளமான சிறிய மற்றும் பெரிய ரயில் பாலங்கள் அமைக்கப்பட்டுவிட்டன. பட்டுக்கோட்டையில் அகல ரயில்பாதை அமைக்கப்பட்டு, ரயில்நிலைய புணரமைப்பு பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான பகுதிகளில் தண்டவாளங்கள் அமைக்குக் பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் அகல ரயில் பாதை பணி முடிவடைந்து, ரயில் போக்குவரத்து தொடங்கப்படுமா என, பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.