Panchami land: தஞ்சை மாவட்டத்தில் பஞ்சமி நிலங்களை போர்க்கால அடிப்படையில் கணக்கு எடுக்க வேண்டுமென கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தஞ்சை கலெக்டர் அண்ணாதுரையிடம் ஆதிதிராவிடர் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் சதாசிவக்குமார் தலைமையில் விவசாயிகள், பொதுமக்கள் மனு அளித்தனர்.
அதில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமைக்காகவும், வாழ்வாதாரத்துக்கும் ஜனநாயக ரீதியாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறோம். அந்த வகையில் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்தபோது புறம்போக்கு நிலத்தை சீர் செய்து தமிழகம் முழுவதும் 12 லட்சம் ஏக்கர் நிலம் தலித்து மக்களுக்கு வழங்கப்பட்டது.
தஞ்சை மாவட்டத்தில் தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் தலித் அல்லாதவர்களிடம் உள்ளது. தலித் மக்கள் அவர்களது நிலத்திலேயே அடிமைகளாக வாழும் நிலை உள்ளது. வாங்கிய கடனை அடைக்க தங்களையும், தங்கள் வாரிசுகளையும் கொத்தடிமைகளாகவே வைத்திருக்கின்றளர்.
இதிலிருந்து விடுபட தஞ்சை மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை போர்க்கால அடிப்படையில் கணக்கெடுப்பு துவங்க வேண்டும். சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலங்களை மீட்டு தலித் மக்களிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.