Nadiamman Temple Therottam: பட்டுக்கோட்டையில் நாடியம்மன் என்ற பெண் தெய்வத்தை மக்கள் வழிபட்டு வருகின்றனர்.(நாடி+அம்மன்= நாடியம்மன்) தன்னை நாடிவந்து வழிபடுபவர்களுக்கு நல்லதை செய்யும் அம்மன் நாடியம்மன் எனப்படுகிறது. பெரும்பாலும் நாடிமுத்து என்ற பெயர் இவ்வூரைச் சேர்ந்தவர்கள் அதிகஅளவில் வைத்துக் கொள்கிறார்கள். அந்தப் பெயரும் இந்த அம்மன் பெயரால் ஏற்பட்டதுதான்.
நாடியம்மன் கோயில் தேரோட்டம் Nadiamman Temple Therottam
பட்டுக்கோட்டையில் காவல் தெய்வமாகவும் தன்னை நாடி வந்தவர்களை காக்கும் நாடியம்மன் கோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா கடந்த மாதம் 22ம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா நாட்களில் நாடியம்மன் காலை நேரங்களில் பல்லக்கிலும், இரவில் காமதேனு, அன்னம், பூத, சிம்மம், ஓலைச்சப்பரம், குதிரை ஆகிய வாகனங்களில் வீதியுலா வந்தார்.
திருவிழாக்களில் முக்கிய நாளான திருத்தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. வாணவேடிக்கைகள் முழங்க பட்டுக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் “தாயே நாடியம்மா” என்று கோஷங்களை எழுப்பினர். தேரடித் தெருவிலிருந்து தேர் புறப்பட்டு வடசேரிரோடு, பிள்ளையார்கோயில்தெரு வழியாக பெரியதெருவில் தேர் நிறுத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தகோடி பெருமக்கள் கலந்து கொண்டு நாடியம்மனின் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து அம்மனை தரிசனம் செய்து திருவருளை பெற்றுச் சென்றனர்.
மேலும் இதுபோன்ற பதிவுகள் பார்க்க Facebook பக்கங்களை லைக் பண்ணுங்க