Save Delta: கஜா புயலின் கோர தாண்டவத்துக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல், தோட்ட வீடுகளிலும், காடுமேடுகளிலும் பதுங்கிக் கிடந்தவர்கள், தற்போது மெள்ள வெளியில் தலைகாட்டிக் கதறத் தொடங்கியிருப்பது, நம் அனைவரையும் கலங்கடிக்கிறது. புயல் கடந்த பூமியான காவிரி டெல்டா, போர் நடந்த பூமியாகக் காட்சியளிக்கிறது.
கஜா புயலின் கோர தாண்டவத்தால் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களின் பெரும்பகுதிகள் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன. கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, தேனி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சில பகுதிகளும் இந்தப் புயலில் சிக்கிச் சிதைந்துள்ளன. அரசாங்கத்தின் கணக்குப்படியே இதுவரையிலும், 45 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். உயிருக்கு உயிராக வளர்த்த ஆடுகள், மாடுகள், கோழிகள் என சுமார் ஆயிரக்கணக்கான கால்நடைகள் இறந்துள்ளன. லட்சக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. முக்கிய வாழ்வாதாரமான விவசாயம், பெருமளவு அழிந்துவிட்டது.
இந்தியாவின் மிகமுக்கிய தென்னை உற்பத்தி மண்டலங்களில் ஒன்று காவிரிப்படுகை. திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்களில் சுமார் 60,000 ஹெக்டேர் பரப்பில் பரவிக்கிடக்கிறது தென்னைச் சாகுபடி. இதில் 60 சதவிகிதத் தென்னை மரங்களைச் சாய்த்துப் போட்டுவிட்டது கஜா புயல். அன்றாட வாழ்க்கைக்கு, குழந்தைகளின் படிப்புச் செலவுக்கு, திருமணச் செலவுக்கு எனக் கனவுகண்டு வைத்திருந்த விவசாயிகள், அடுத்தவேளைத் தேவைக்கே யார் உதவிக்கு வருவார்கள் எனச் சாலைகளில் காத்துக்கிடக்கும் கொடுமையான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஒரு தென்னங்கன்று மரமாகி விளைச்சல் தர, குறைந்தது பத்தாண்டுகளாவது ஆகும். ‘எங்கள் வாழ்க்கை பத்தாண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டது’ என்று கலங்குகிற காவிரிப்படுகை மக்களை என்ன சொல்லித் தேற்றுவது!
நெல், கரும்பு, வாழை, மரப்பயிர்கள் என ஒட்டுமொத்த விவசாயமும் குலைந்துகிடக்கிறது. சாலைகளில் விழுந்த மரங்கள், கிராமங்களைத் துண்டித்துள்ளன. தொலைத்தொடர்பு இன்னும் முழுமையாகச் சீரடையவில்லை. 80,000-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்துவிட்டன. மின்சாரம் கிடைக்க அதிகபட்சம் இரண்டு மாதங்கள் வரைகூட ஆகலாம் என்ற சூழலில்… இருட்டிலும் துயரத்திலும் மூழ்கி, ஒட்டுமொத்தமாகத் தொடர்பு எல்லைக்கு வெளியே கிடக்கிறது காவிரி டெல்டா.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் திறம்படக் கையாண்ட அரசு, நிவாரணப் பணிகளைத் துரிதமாகச் செய்யவில்லை என்ற கோபம் மக்களைக் கொந்தளிக்க வைத்திருக்கிறது. வழக்கம்போல, ‘பாதிப்பு ஏதும் இல்லை’ என்பதை நிறுவுவதில் மட்டுமே மக்கள் பிரதிநிதிகள் குறியாக இருப்பதுதான் மக்களின் கோபத்துக்குக் காரணம்.
நிவாரணம்:
பல்வேறு அமைப்புகள், இளைஞர்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், அரசியல் இயக்கங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களால் இயன்ற உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்து வருகின்றனர். இதை போன்று நாமும் இளைஞர்கள் மற்றும் சிறு சிறு அமைப்பின் துணையோடு கடந்த ஒரு வாரத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியை தேர்ந்தெடுத்து அங்கு உள்ள குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, 3 கிலோ காய்கறிகள், சமையல் எண்ணெய், ரவா, குளியல் மற்றும் சலவை சோப்பு, டீ தூள் மற்றும் பிஸ்கட் போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கி உள்ளோம்… இன்னும் பல்வேறு கிராமங்களில் நிவாரணம் சென்றடையவில்லை என்ற தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன…
நேற்றுவரை நமக்கு உணவு தர உழைத்தவர்கள் இப்போது வீடிழந்து, வாழ்வாதாரம் இழந்து, எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை இழந்து தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தச் சகோதர்களுக்குக் கரம்கொடுத்து ஆறுதல் சொல்லி அரவணைக்க வேண்டிய தருணம் இது. பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் உடனடித் தேவைகளையும், அடுத்தகட்டத் தேவைகளையும் நிறைவு செய்வதுதான் இப்போதைய முக்கியப் பணி. துயர் துடைக்கும் பணியில் தன்னையும் இணைத்துக்கொள்ளுங்கள்.
துயரத்தில் தவிக்கும் காவிரிப்படுகை மக்களுக்காகக் கைகோப்போம், வாருங்கள். உங்கள் பங்களிப்பையும் பாதிக்கப்பட்ட மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டியது, எங்களின் பொறுப்பு. நன்றி….
நீங்களும் உதவி கரம் நீட்டலாம்…
தொடர்புக்கு..
98413 32874, 9715157071
MADHAVAN M,
A/c No- 31993524604,
State bank of india,
Saidapet Bazaar(Chennai),
IFS code- SBIN0002266,
——–
Rajesh S
A/C No : 104001513060
C.I.T NAGAR, NANDANAM,
CHENNAI- 600035
IFSC : ICIC0001040 ( KOTTURPURAM )
TEZ ( Google Pay) : 9715157071