அண்ணா பல்கலைக் கழகத்தில் இன்ஜினியரிங் கலந்தாய்வில் (Engineering Counselling ) பங்கேற்கும் மாணவர்கள் உரிய நேரத்தில் பங்கேற்பதற்கு வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
சிறப்பு பேருந்துகள்
இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்களின் வசதிக்காக மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து காலை 5 மணி முதல் 10 நிமிட இடைவெளியில் கோயம்பேடு – திருவான்மியூர் வழித்தடத்தில் (எண்.170) வடபழனி, அசோக்பில்லர், சைதாப்பேட்டை, அண்ணாபல்கலைக்கழகம் வழியாக 10 சிறப்பு பேருந்துகள் நேற்று முதல் இயங்கி வருகின்றன.
பெருங்களத்தூரிலிருந்து காலை 5 மணியிலிருந்து 21 ஜி (பெருங்களத்தூர்- பிராட்வே) வழித்தடத்தில் தாம்பரம், பல்லாவரம், கிண்டி, சைதாப்பேட்டை, அண்ணாபல்கலைக்கழகம் வழியாக 10 சிறப்புப் பேருந்துகள் இயங்கி வருகின்றன. தவிர ஏற்கனவே தாம்பரம், கிண்டி, வடபழனி, சென்ட்ரல், எழும்பூர், பிராட்வே, அண்ணாநகர், அம்பத்தூர், ஆவடி, அயனாவரம், தி.நகர், திருவான்மியூர் போன்ற பகுதிகளில் இருந்து 300 மாநகர பேருந்துகள் அண்ணா பல்கலைக்கழகம் வழியாக இயக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.