செய்திகள்

ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆதரித்து பேசிய காவலருக்கு பத்து மாதங்கள் கழித்து தண்டனை

ஜல்லிக்கட்டு

சென்னை மெரினா ஜல்லிக்கட்டின் போராட்டத்தின் போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திடீரென மைக் பிடித்து பேசி பரபரப்பூட்டிய ஆயுதப்படை காவலர் மாயழகு மீது 10 மாதங்கள் கழித்து போலீஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சென்னை மெரினா கடற்கரையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் வரலாற்று சிறப்பு மிக்கது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் போலீஸாரும், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களும் அன்பாக இருந்தனர். குடிநீர், உணவை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர்.

ஒரு கட்டத்தில் ஆவேசமான இளைஞர்களை சந்திக்க போலீஸ் அதிகாரிகளும் யோசித்த நிலையில் மயிலாப்பூர் துணை ஆணையராக இருந்த பாலகிருஷ்ணன் இளைஞர்களிடம் பேசினார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பலரும் குரல் கொடுக்க போராட்டம் பெரிதானது.

காவலர் மாயழகு

மெரினா

இந்த நேரத்தில் காவல் பணியிலிருந்த ஆயுதப்படை காவலர் மாயழகு திடீரென மைக் பிடித்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், விவசாயத்துக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தார். அப்போது பேசிய அவர், இது ஒரு துவக்கம்தான் என்றும், இன்னும் நாம் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது என்றும் கூறினார். மேலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசுவதால் தமக்கு எந்த பயமும் இல்லை என்றும், காவல்துறையில் இருக்கும் தங்களுக்கும் உணர்வு இருக்கிறது என்றார்.

பின் பேசிய அவர், தமிழர்களுக்கு ஒரு கெட்டப்பழக்கம் உண்டு, அது முன்வைத்த காலை பின் வைக்கமாட்டார்கள் என கூறிய போது இளைஞர்களின் சத்தம் விண்னை பிளந்தது. மேலும் இது நியாமான போராட்டம் என்றும் தான் பேசுவதை பல காவலர்கள் பேச வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்றும் கூறினார். இவ்வாறு உணர்வுபூர்வமாக அவர் பேசியதன் மூலம் அங்கு இருந்த இளைஞர்களிடையே பலத்த வரவேற்பை அவர் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதனால் போலீஸார் மீது போராடும் இளைஞர்களுக்கு மரியாதை வந்தது. போலீஸ் என்ற நிலை மறந்து பேசிய இளைஞர் மாயழகு மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று பல தரப்பிலிருந்தும் அப்போது கோரிக்கை வந்தது. போராட்டக்காரர்களும் கோரிக்கை வைத்தனர்.

அப்போது போலீஸ் உயரதிகாரிகள் மாயழகு மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று உறுதியளித்தனர். மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணனும் நிச்சயமாக நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.

ஆனால் கடந்த ஜூன் மாதம் திடீரென மாயழகுக்கு மெமோ கொடுக்கப்பட்டது.  அது குறித்து கேட்டபோது சாதாரண நடைமுறைதான் என்று தெரிவித்த உயரதிகாரிகள் கடந்த 13-ம் தேதி திடீரென 3-பி சார்ஜ் மற்றும் ஓராண்டுக்கு சம்பள உயர்வு ரத்து என்று உத்தரவிட்டுள்ளனர்.

அப்போது தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள் மாயழுகுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்கள்

இது அவருடய பதவி உயர்வையும், சம்பள உயர்வையும் தடுக்கும் என்று காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது. தற்போது மாயழகுக்கு ஆதரவாக வலைதளங்களில், போலீஸார் வாட்ஸ் அப்பில் தகவல் பரவி வருகிறது. மீண்டும் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு பிரச்சினை கிளம்பினால் மாயழகு பிரச்சினையும் தலைதூக்கும் எனத் தெரிகிறது.

காவலர்கள் என்பவர்கள் உணர்ச்சி வசப்படக்கூடாது, காவல் பணியில் ஜாதி, மதம், இனம் மற்றும் மற்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்தினால் கடமையை செய்ய முடியாது. அதே நேரம் நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று தெரிவித்து 10 மாதங்கள் கழித்து தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது போலீஸாரிடையே பரபரப்பாக பேசப்படுகிறது.

About the author

admin

Leave a Comment