பட்டுக்கோட்டை செய்திகள்

பட்டுக்கோட்டை அருகே முதல் எமன் கோவில்: ஜனவரி 22-ல் கும்பாபிஷேகம்

எமன் கோவில்

எமன் கோவில் தமிழகத்தில் தனி சன்னதியாக இல்லாமல், ரூ.3 கோடியில் தனிக் கோயிலாகவே அமைந்துள்ள எமதர்மராஜன் கோயிலின் கும்பாபிஷேகம் ஜன.22-ம் தேதி நடைபெற உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அமைந்துள்ளது திருச்சிற்றம்பலம் கிராமம். தேவர்கள், சிவபெருமானை வேண்டுவதற்காகச் சென்றபோது, அவர் நிஷ்டையில் இருந்தார். அப்போது, மன்மதனை வரவழைத்து சிவனின் தவத்தை தேவர்கள் கலைத்தனர். இதனால் கோபம் கொண்ட சிவன், மன்மதனை அழித்தார்.

பின்னர், ரதிதேவியின் வேண்டுதலுக்காக மன்மதனை உயிர்ப்பித்தார். அப்போது எமதர்மன், சிவனிடம் தனக்கு அழிக்கும் பணி கொடுக்கப்பட்டு இருக்கும்போது, அதைச் செய்ய தனக்கு உத்தரவிடும்படி வேண்டினார். சிவனும் அவ்வாறே அவருக்கு அருள்புரிந்ததாக புராண வரலாறு கூறுகிறது.

அவ்வாறு அழிக்கும் பணியைச் செய்துவரும் எமதர்மனுக்கு திருச்சிற்றம்பலத்தில் மண்ணால் ஆன சிலையை வைத்து வழிபாடு செய்துவந்துள்ளனர். பின்னர் சிறிய கூரை வீடு போல அமைத்து அங்கு எமதர்மனை வழிபட்டனர். தற்போது அங்கு ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிதாக கோயில் கட்டப்பட்டுள்ளது. இக் கோயிலின் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, “உயிரைப் பறிக்கும் எமனுக்கும் சிறு கோயில் அமைத்து 1,300 ஆண்டுகளாக வழிபட்டு வருகிறோம்.

eman temple

முதலில் மண்ணால் ஆன எமன் சிலையை வைத்து வழிபாடு நடத்தி வந்தோம். தற்போது, ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிதாக கோயிலைக் கட்டி உள்ளோம். 2 டன் எடையில் சுமார் 6 அடி உயரத்தில் எமனுக்கு கற்சிலையை வடிவமைத்து பிரதிஷ்டை செய்ய உள்ளோம்.

இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களின் ஆயுள் நீடிக்க வேண்டிக்கொள்கிறார்கள். சனிக்கிழமைகளில் எமகண்ட நேரத்தில் இங்கு ‘ஆயுள்விருத்தி ஹோமம்’ செய்யப்படுகிறது” என்றனர்.

திருவிழா:

ஆடி விழா, மாசியில் மன்மத திருவிழா.

தல சிறப்பு:

இங்கு எமதர்மன் மூவலராக அருள்பாலிக்கிறார்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு எமதர்மராஜா திருக்கோயில், திருச்சிற்றம்பலம்– 614 628. பட்டுக்கோட்டை தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம்.

போன்:

+91- 98943 24430

பொது தகவல்:

மன்மதன் உயிர்பிக்கப்பட்ட தலம் இத்தலத்திற்கு அருகில், “காமன்பொட்டல்’ என்ற பெயரில் இருக்கிறது. இக்கோயில் வளாகத்தில் வீரனார், ராக்காச்சி, முத்துமணி, கருப்பண்ணசுவாமி, கொம்புக்காரன், வடுவச்சி என காவல் தெய்வங்களும் இருக்கின்றன.

பிரார்த்தனை:

ஆயுள் நீடிக்க இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். எமதர்மர், நீதிக்கு அதிபதியாக இருப்பதால் ஏமாற்றப்பட்டவர்கள், பொருளை திருட்டு கொடுத்தவர்கள் அதிகளவில் இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். தங்களது கோரிக்கையை ஒரு பேப்பரில் எழுதி, அதனை எமதர்மன் சன்னதியில் வைத்து பூஜித்து, சூலத்தில் கட்டிவிடுகின்றனர். இவ்வாறு வேண்டுதல் வைக்கப்பட்ட சில நாட்களில் பொருட்கள் திருப்பிக் கிடைத்துவிடும் என்பது நம்பிக்கை. இதனை, “படி கட்டுதல்’ என்கிறார்கள். சனிக்கிழமைகளில் எமகண்ட நேரத்தில் (மதியம் 1.30 – 3 மணி) இங்கு “ஆயுள்விருத்தி ஹோமம்’ செய்யப்படுகிறது. சனியும், சூரியபகவானும் எமனின் புத்திரர்கள் ஆவர். எனவே, இவர்களிருவரும் சகோதரர்கள் ஆகின்றனர். எனவே, சனிக்கிழமை எமகண்ட நேரத்தில் இவரை வழிபடுவது சிறப்பு என்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தலபெருமை:இக்கோயிலில் எமதர்மன் தனிக்கோயில் மூர்த்தியாக, முறுக்கிய மீசையுடன் எருமை மீது அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். நீல நிற வஸ்திரம் அணிந்தபடி காட்சி தரும் இவர் மேற்கு நோக்கியிருப்பது சிறப்பம்சம். கைகளில் பாசக்கயிறு, ஓலைச்சுவடி மற்றும் கதை வைத்திருக்கிறார். இவருக்கு கீழே சித்திரகுப்தனும், எமதூதரும் இருக்கின்றனர். இவருக்கு பச்சரிசி சாதம் மற்றும் கனிகள் நைவேத்யம் படைத்து பூஜைகள் செய்யப்படுகிறது.

அருகில் பாம்பாட்டி சித்தர், பூரணா, புஷ்கலாவுடன் அய்யனார் ஆகியோரும் இருக்கின்றனர். ஆடி மாதத்தில் நடக்கும் விழாவின்போது, பத்து நாளும் இவருக்கு ராஜஅலங்காரம் செய்யப்படுகிறது. அப்போது இவர் வேட்டைக்கு செல்வதாக ஐதீகம். இவரது உக்கிரத்தை குறைப்பதற்காக நேரே ராஜகணபதியும், அவருக்கு பின்புறத்தில் பால தண்டாயுதபாணியும் இருக்கின்றனர்.

எமன், தர்மத்தின் வடிவமாக இருப்பவர். சிறிதாக தவறு செய்தாலும், அவர்களை உடனே தண்டித்துவிடுவார். எனவே, இக்கோயில் வளாகத்தில் உள்ள தீர்த்தத்தில் பெண்கள் நீராடுவதில்லை. அறியாமல் தவறு செய்துவிட்டாலும், எமதர்மனின் கோபப்பார்வைக்கு ஆளாக வேண்டும் என்ற பயத்தில் நீராடுவதில்லை என்கிறார்கள்.

தல வரலாறு:

ஒருசமயம் தேவர்கள், சிவபெருமானை வேண்டச்சென்ற போது, அவர் நிஷ்டையில் இருந்தார். எனவே, மன்மதனை வரவழைத்து அவன் மூலமாக சிவன் தவத்தை கலைத்தனர். இதனால் கோபம் கொண்ட சிவன், மன்மதனை அழித்தார்.

பின் ரதிதேவியின் வேண்டுதலுக்காக இத்தலத்திற்கு அருகிலுள்ள ஓர் தலத்தில் உயிர்பித்தார். அப்போது எமதர்மன், சிவனிடம் தனக்கு அழிக்கும் பணி கொடுத்திருக்கும்போது, அதனை செய்ய தனக்கு உத்தரவிடும்படி வேண்டினார்.

சிவனும் அவருக்கு அருள்புரிந்தார். இதன் அடிப்படையில் பிற்காலத்தில் இவ்விடத்தில் எமதர்மனுக்கு கோயில் கட்டப்பட்டது.இவருக்கு அருள்செய்த சிவனுக்கு சற்று தூரத்தில் தனிக்கோயில் இருக்கிறது.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு எமதர்மன் மூவலராக அருள்பாலிக்கிறார்.

About the author

admin

1 Comment

  • சனியும், சூரியபகவானும் எமனின் புத்திரர்கள் ஆவர்.
    இது முற்றிலும் தவறு. சூரியனின் மகன்கள் தான் சனி, எமன்

Leave a Reply to ksk X